நித்யஸ்ரீ மூன்றே முக்கால் மணி நேரம் பாடி பைரவியும், ஹம்சாநந்தியும், தேஷும் கொண்டு உள்ளத்தை நிரப்பினார். பாம்பே ஜெயஸ்ரீயின் ராகம் தானம் பல்லவி ஒருபுறம் பார்த்தால் மோகனம், மறுபுறம் பார்த்தால் கல்யாணி என்று விளையாட்டுக் காட்டியது. பிரசன்னாவின் பதற்றமும் திறமையும் அவர் கிதார் வாசிப்பில் வெளிப்பட்டது. சஞ்சய் பற்றிச் சொல்லவே வேண்டாம். ‘சீதம்மா மாயம்மா’வை பல்லவி பாட எடுத்துக்கொண்டு, சபையின் முழுக் கவனத்தையும் நாதப் பின்னல்களால் கட்டிப் போட்டு ஆக்கிரமிக்கும் குரல் வளம்… சங்கீத ஞானம். ‘ஊரிலேன் காணியில்லை’, ‘கருப்பூரம் நாறுமோ’ போன்ற பாசுரங்களைப் பாடி, எனக்குப் புத்தாண்டுப் பரிசு தந்தார். (பை தி வே… பைபிளின் சாலமன் கானத்தில் ஆண்டாளுக்கு ஒப்பான கருத்து உள்ளதாமே!). உன்னிகிருஷ்ணன் தோடியில் மோகனமும் ஹிந்தோளமும் சுருதிபேதம் செய்து கோடி காட்டி, பகுதாரியில் ராகம் தானம் பல்லவி பாடினார். கர்னாடக சங்கீதத்தை ரசிக்கத் தெரியாதவர்கள், வாழ்வில் ஒரு முக்கியமான சந்தோஷத்தைக் கைவிடுகிறார்கள்.
ஒவ்வொரு வாரமும் நியூயார்க்கர் பத்திரிக்கை ஒரு கார்ட்டுனுக்கு வாசகர்களின் வாசகங்களை ஏற்றுக்கொள்கின்றது. நியூயார்க்கரின் கார்ட்டூன்களுக்கு ஒரு நூறு வருட பாரம்பரியம் இருக்கிறது. அதற்கேற்றார் போல் இந்த மாதிரி கார்ட்டுன் வாசகம் எழுதுவதற்க்கும் ஒரு எழுதப்படாத இலக்கண விதி இருக்கிறது. கடந்த சில வருடங்களாக வாரா வாரம் நானும் வாசகம் எழுதிக் கொண்டிருக்கிறேன், கொஞ்சம் பிடிபட்ட மாதிரி தோன்றுகிறது.
நியூயார்க்கரில் தான் எழுதுவதை பிரசுரிக்க மாட்டேன் என்கிறார்கள், நானும் விக்கிரமாதித்தனாய் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கிறேன். இங்கேயாவது அதை போட்டு வைக்கலாம் என்று தோன்றுகிறது.
திடீரென பழைய திரைப்பட விமர்சனத்துக்கு ஈமெயிலில் ஆரேழு கமெண்டுகள் வந்த போதே புரிந்திருக்க வேண்டும். என்னவென்று சென்று பார்த்தால் தான் தெரிந்தது – இன்றோடு சரியாக பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த பன்சாலியின் ப்ளாக் திரைப்படம் தற்போது நெட்ஃபிளிக்ஸில் வந்திருக்கிறது.
அறிவிப்பைப் பார்த்து விட்டு ஜனம் முழுக்க அதைப் பற்றி இண்டர்நெட்டில் தேட, இன்னமும் கடையை மூடாமல் இருக்கும் அரதப்பழசான நம் ப்ளாகில் இருந்த பட விமர்சனம் கண்ணில் பட, நன்றி நன்றி என்று ஈமெயில்கள். முன்பெல்லாம் விமர்சனம் எழுதினால் தாம்தூம் என்று திட்டுபவர்கள் எல்லாம் எங்கே போனீர்கள் அய்யா!
பழைய விமர்சனம் தான் என்றாலும் போனால் போகட்டும் என்று படித்து விடலாம். தப்பில்லை.
அருண் அப்பார்ட்மெண்டிற்கு லிப்டில் போகும் போது கண்ணாடியில் முகம் பார்த்துக் கொண்டான். நான்கு நாள் தாடியும், அடர்த்தியான கலைந்த தலைமுடியும் தெரிந்தது. ஃபோனை அப்பார்ட்மெண்டின் கதவருகே எடுத்துக் கொண்டு போன போது சரக் என்று பூட்டு திறந்து கொள்ளும் ஓசை கேட்டது.
கவிதா சோபாவில் படுத்துக் கொண்டிருந்தாள். பாதி உடம்பை மைக்ரோ ப்ளஷ் போர்வை மூடிக்கொண்டிருந்தது. வாராத தலை, மூக்குக் கண்ணாடி, கையில் Catakism – Bow to the meow புத்தகம்.
போனை டேபிளில் வைத்து விட்டு ரெஃப்பிரிட்ஜ்ரேட்டரை திறந்து, “உனக்கு எதாவது வேணுமா, ஃப்ரூட், க்ரீக் யோகர்ட், சீஸ்?” என்றான்.
“நோ… செம போர், வாக் போலாமா” என்றாள்.
“ஸ்காட்ச்?”
“நாட் நவ்… மே பி வரும் போது பார் போலாம்”
கையில் எடுத்த மில்க் கார்ட்டனை திறந்து வாயில் வைத்து ஒரு மடக் செலுத்திக் கொண்டான். அவளருகில் வந்து உட்கார்ந்தான்.
அந்த அறையில் அவர்கள் இருந்த சோபாவைத் தவிர, பால்கனி ஓரமாய் ஒரு ஆப்பிள் கணினி, ஆங்காங்கே புத்தக அடுக்குகள், எல்பி ரெக்கார்டுகள், ஜாஸ் போஸ்டர்கள். ஒரு சாம்ஸங்க் டீவி. ஒரு பூந்தொட்டி, எரிந்து கொண்டிருக்கும் நைட்லாம்ப். அருகே ஒரு சின்ன கிச்சன் சுத்தமாய் வைக்கப்படாமல் இருந்தது.
பகலில் ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியரான அருண், இரவில் ஜாஸ் பிரியன். ஜாவா ஸ்கிரிப்டுக்கும் ஜான் கோல்ட்ரேனுக்கும் இடையே அவனது உலகம் ஊசலாடிக் கொண்டிருந்தது. கவிதா மான்ஹாட்டன் நூலகத்தில் புதிதாய் சேர்ந்திருந்த நூலகி மற்றபடி க்ரிஸ்டோஃபர் நோலனின் ரசிகை, அதாவது நோலகி. யதார்த்தத்தை மங்கலாக்கும் கதைகளில் தன்னை சதா நேரமும் மூழ்கடித்துக் கொண்டிருந்தாள்.
”இதென்ன பூனைய பத்தியெல்லாம் படிக்கற?”
“பேசற மாயாஜால பூனைய தவிர மிச்ச எல்லாத்தையும் படிச்சாச்சு” என்று புத்தகத்தை மூடி வைத்தாள். “வாக் போலாமா…”
இரண்டு மாதங்களாக ப்ராஜக்ட் பிசியில் இருந்த அருணுக்கு, திடீரென்று நடை பழக அழைத்த மனைவியின் பேச்சைத் தட்ட முடியாமல், “ஷ்யுர் டா” என்றான்.
“வாட்….. ஐ காண்ட் பிளீவ், வாட்…. என் புருஷன் நான் சொன்னதை உடனே கேட்டுட்டானா” என்று மேற்கூரையை நோக்கிக் கூவினாள்.
மான்ஹாட்டனின் மார்ச் மாத குளிரையும் பொருட்படுத்தாமல், இருவரும் போட்டிருந்த சற்றே மெலிதான உடையுடன் நடக்க ஆரம்பித்தார்கள். இரண்டு பக்கமும் கடைகளில் இரவுணவு கூட்டம். சோஃபிஸ் க்யூபன் எக்ஸ்பிரஸும், டேவ்ஸ் ஹாட் சிக்கனும் மூட ஆரம்பித்திருந்தார்கள். தீப் இந்தியா இன்னமும் மும்மரமாய் இருந்தது. சிவிஎஸ் ஃபார்மஸியின் வாசலில் போலீஸ் வண்டியின் விளக்கெரிந்து கொண்டிருந்தது.
மேற்கு 53ம் தெருவில் நடக்கும் போது இருவரும் ஒரே நேரத்தில் அந்த பூனையைப் பார்த்தார்கள். ஒரு சந்தின் ஓரமாக, இருளை இருட்டடிக்கும் படியாகக் கறுப்பு கலரில் இருந்த அந்த பூனையின் கண்கள் மரகதப் பச்சையாய் இருந்தன. காணாமல் போன குழந்தைகள் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்த ஒரு அஞ்சல் பெட்டியின் மேல் உட்கார்ந்து கொண்டிருந்தது.
“அந்தப் பூனையைப் பாரு, அருண்! நம்மைக் கூப்பிடற மாதிரி இருக்கு” என்றாள் கவிதா, பூனையின் பார்வையில் தன் கண்களைப் பூட்டிக்கொண்டாள்.
அருண் சிரித்தான். “ட்ரூ நம்பள தான் பாக்குது, ஒரு வேள சாப்பாடு வாங்கிக் கொடுங்கன்னுதோ என்னவோ”
அதற்குள் பூனை லாவகமாகக் கீழே குதித்து நடக்க ஆரம்பித்தது, “என்னைப் பின்தொடருங்கள்…” என்று சொல்கிற மாதிரி அவர்களைத் திரும்பிப் பார்த்தது.
வசீகரிக்கப்பட்ட அவர்கள், குறுகிய தெருக்களில் அந்தப் பூனையைப் பின்தொடர்ந்தனர், நகரத்தின் சத்தம் மறைய ஆரம்பித்தது. பூனை, ‘ப்ளூ நோட்’ என்ற நியான் போர்டின் கீழே மங்கலாக விளக்குத் தெரிந்த ஒரு கதவுக்கு முன் நின்றது.
“இது ஜாஸ் பார் போல இருக்கு,” அருண் கதவைத் திறந்து பார்த்தான். மங்கலான விளக்குகளுடனும் பழைய ஜாஸ் சுவரொட்டிகளால் மூடப்பட்ட சுவர்களுடன் இருந்தது அந்த பார். வேறொரு உலகத்திற்குள் நுழைந்தது போலிருந்தது. ஸ்காட்ச் வாசனை காற்றில் மிதந்தது.
“இதென்னது 60ஸ் ஜாஸ் பார் மாதிரி இருக்கு” என்று கிசுகிசுத்தாள் கவிதா.
அமைதியான ஒரு டேபிளை எடுத்துக் கொண்டார்கள். கருப்புப் பூனை அவர்களின் காலடியில் சுருண்டு உட்கார்ந்தது. சாக்ஸபோனின் சத்தம் அறையை நிரப்பியது, அதன் இசையில் ஆழ்ந்தார்கள். அருண் கவிதாவைப் பார்த்துச் சிரித்தான்.
“இந்த இடம்… மேஜிக்கல். ஏதோ கனவுல வர மாதிரி”
கவிதா தலையசைத்தாள், அவள் கண்களில் அம்பர் விளக்குகள் பிரதிபலித்தன.
“நாம எல்லாத்துலேந்தும் விலகி, நமக்கு சொந்தமான ஒரு சின்ன உலகம் போல இருக்கு. இதுக்கு முன்னாடி இந்த இடத்தை பத்தி கேள்விப்பட்டதே இல்லல”
ஸ்காட்சை அருந்தியபடி அருண், “உன் புக்ஸ்ல வர மாதிரி வாழ்க்கையில இந்த மாதிரி நிறைய விஷயங்கள் இருந்தால் எப்படி இருக்கும்? பச்சை கண் மாஜிகல் பூனை, நேரத்தை மறக்கடிக்கும் ஜாஸ், இந்த ஸ்மூத் ஸ்காட்ச்” என்றான்.
கவிதா சிரித்துக்கொண்டே, “யாருக்குத் தெரியும், இப்போ கூட நாம அந்த மாதிரி ஏதாவது கதை ஒண்ணுக்குள்ள இருக்கலாம்.”
அடுத்த சில மணிநேரங்களில் அவர்களின் உரையாடல் கனவுகள், அச்சங்கள் என்று துள்ளலுடன் அலைந்து திரிந்தது. அந்த மாலை நிஜத்திற்கும் கற்பனைக்கும் இடையிலான கோடுகளை மங்கலாக்கியது.
மீண்டும் தெருவில் இறங்கிய போது பூனை காணாமல் போனதைக் கண்டார்கள். வீட்டிற்கு நடந்து சென்றபோது அருண் கவிதாவை குளிரிலிருந்து காப்பாற்றுவது போல அணைத்துக் கொண்டான். கவிதா ஒரு முறை அவனைத் திரும்பிப் பார்த்தாள். அவனின் இந்த புதிய கவனிப்பு அவளுக்குப் பிடித்திருந்தது.
திரும்பி வந்த போது அவர்களின் அப்பார்ட்மெண்ட் துடைத்து வைத்த மாதிரி சுத்தமாய் இருந்தது. நகர நியான் விளக்குகளின் மென்மையான பிரகாசத்தில் அந்த அறையே மின்னியது. அருண், கவிதாவை இழுத்து நடனமாட இழுத்தான். “நான் உன் கூட இருக்கும்போது யாருக்குத் தேவை இந்த படு போர் புக்ஸ்?” கண்ணடித்தான்.
கவிதா சிரித்தாள், “இந்த chapter எனக்கு இன்னும் பிடிச்சிருக்கு,” அவள் கைகளால் அவனைச் சுற்றிக் கொண்டாள். அவர்கள் மெதுவாக அசைந்தபோது அவ்விரவு ஒரு ஆத்மார்த்தமான ஜாஸ் மெல்லிசையாக அவர்களைப் படர்ந்தது.
மாலினியின் குடும்பம் ரொம்பப் பெரியது. அவளுடைய அப்பா அவர் வீட்டில் கடைசிக் குழந்தை. அவருக்கு முன்னால் 6 அத்தை மற்றும் பெரியப்பாக்கள். அம்மாவின் வீட்டின் வழியாக 18 கஸின்கள். இந்த கூட்டத்தை விட பெரியது என்றால் அது அவளுடைய நண்பர்கள் தான். 4 நகரங்களில் 6 பள்ளிக்கூடங்களிலும் 2 பெரிய கல்லூரிகளிலும் படித்திருந்தாள். சரியான வாயாடி. அவளுடைய எல்லா உறவினர்களும், நண்பர்களும் whatsappல் இருக்கிறார்கள்.
மாலினி திருமணமாகி கணவனுடன் பெர்லினில் இருக்கும் பெரிய ஜெர்மன் வங்கியில் வேலை செய்யப் போனாள். வேலை போக மிச்ச நேரத்தைக் கணவனுடனும் whatsappபிலும் கழித்தாள். தினமும் ஸ்டேட்டஸ் போட்டாள், மறக்காமல் பிறந்தநாள் மணநாள் வாழ்த்து அனுப்பினாள், எல்லோரின் மெசேஜுக்கும் 👏🏽👍🏽👌🏽போட்டாள். எல்லோரும் அவளுக்கு பிறந்தநாள், மணநாள் மெசேஜ் அனுப்பினார்கள், 😍🎉😂 என்றும் எமொஜியிட்டார்கள்.
இரண்டு வருடங்களுக்கு முன் அவளுக்கு முதல் குளிர் ஜுரம் வந்தது. ஸ்டேட்டஸில் போட்டாள். 17 மெசேஜ்கள் 27 😭🥹😞 எமோஜிகளும் வந்தன. அவ்வருடத்தின் இரண்டாம் பாதியில் காரில் ஏறப்போனவள் தடுக்கி விழுந்து காலை முறித்துக் கொண்டபோது, 8 மெசேஜ்கள் , 16 👩🏽🦽👩🏽🦯🤞🏽😘 எமோஜிகள். போன வருடம் கணவனுக்கு திடீரென்று டயபடீஸ் என்று ஸ்டேட்டஸ் போட்டாள், 6 மெசேஜ்கள், 8 டயபடீஸ் ஃபார்வர்டு மெசேஜ்கள் மற்றும் 20 😞🫶🏽 எமோஜிகள். போன மாதம், கணவன் நெஞ்சு வலியில் மறித்துப் போக, 60 RIPகள் மற்றும் 36 😭🫂 எமோஜிகள்.
இன்று மாலினியின் பிறந்தநாள். 260 க்ரூப் மெசேஜ்கள், 25 🎉💃🏽🥳எமோஜிகள். அவளுடைய எல்லா உறவினர்களும், நண்பர்களும் whatsappல் இருக்கிறார்கள்.